பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்

ஈ.வே. ராமசாமி நாயக்கரை மிகைபடப் புகழ்கின்ற போதும், அவர் மீது கொண்ட பற்றினால் உண்மைக்கு மாறாக அளவுக்கு மீறி அறிமுகமும் விளம்பரமும் தொடரந்து கூறும் போதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரை விமர்சனம் செய்யவைக்கிறது.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தொண்டர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியும்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார்; ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்பொழுதும் முரண்பட்டு பேசியது கிடையாது என்றெல்லாம் பேசி, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உயர்ந்த ஒரு இடத்தை கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் பல தடவை முரண்பட்டு பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல, வரலாற்றை திரித்தும் பேசியிருக்கிறார். ஆதாரம் இதோ!

முரண்பாடு: 1

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”
(விடுதலை 30-05-1967)

‘புத்தனுக்கு சிலை வேண்டாம்’ என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முன் என்ன சொன்னார் தெரியுமா? இதோ!

‘‘புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’
(விடுதலை 09-05-1953)

உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்தரின் உருவ பொம்மையைத் தயாரித்துக் கொள்ளச் சொன்னார் என்பதிலிருந்து ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

முரண்பாடு 2:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’
(குடியரசு 16-11-1930)

இப்படிச் சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’

முதலில் கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டும் மாறியது? கிறிஸ்தவ மதத்தில் காமக்களியாட்டத்திற்கு இடமில்லை என்று சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போன்றதாகும். ஏனென்றால் கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்பதை கிறிஸ்தவ அறிஞர்களே விளக்கியிருக்கிறார்கள். அதனால் ஆபாசம் இல்லை என்ற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாதம் உண்மையில்லததாகும்.

முரண்பாடு: 3

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘மற்றெல்லா மதங்களைவிட புத்தமதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.
(குடியரசு 15-04-1928)

இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.
(விடுதலை 03-02-1954)

பவுத்தத்திற்கும், அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.
(விடுதலை 20-02-1955)

இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

பவுத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை.
(குடியரசு 19-01-1936)

புத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.
(குடியரசு 31-05-1936)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:
‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.
(விடுதலை 06-01-1976)

நமக்கு புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

முரண்பாடு: 4

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மனித நேயம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் பிராமணர்களுடைய விஷயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய மனிதநேயம் எப்படிப்பட்டது தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும்’’
(விடுதலை 29-01-1954)

‘‘எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக்கூடாது’’
(விடுதலை 20-10-1967)

கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும்.
(விடுதலை 19-10-1958)

‘‘பெரியார் மாளிகைக்கு வந்தால் பார்ப்பன நிருபர்களை நெட்டித்தள்ளச் சொன்னார்’’
(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்
-வே. ஆனைமுத்து)

வீரமணி கூறுகிறார்:-

பெரியார் அவர்கள் துவேஷம் பாராட்டியதில்லை என்று இன்று சொல்லுகிறார்கள் ஒன்றை தெளிவாகக் கேட்கிறோம். ‘‘பார்ப்பனனே வெளியேறு’’ என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள்.
(நூல்:- சங்கராச்சாரி யார்?)

‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’
(நூல்:- இந்துத்துவாவின் படையெடுப்பு)

‘‘சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, அரசியல் சட்டம், காந்தியார், நேரு படத்தை கொளுத்தவேண்டும். இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்கமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெறவேண்டும்’’.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த மனிதநேயதில்லாத, வெறித்தனமான பேச்சால்தான் தூத்துக்குடி, புதுக்கிராமத்தில் உள்ள அக்கிரகாரத்தில் புகுந்து பூணுல்கள் அறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள்.

‘‘திருச்சி காவிரி, தில்லை ஸ்தான படிக்கட்டு அருகில் தாக்கப்பட்டு பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது’’

“சில வருடங்களுக்கு முன் சென்னையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு பூணூல்கள் அறுக்கப்பட்டது’’

அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நா யக்கர்தான் மனிதநேயவாதியா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்யான மனிதநேயம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் யாரை தங்களுடைய எதிரியாக நினைத்தாரோ- யாரை ஓழித்தால் சாதி ஓழியும் என்று சொன்னாரோ-அந்தப் பார்ப்பனரை தேர்தலிலே ஆதரிக்கவும் செய்திருக்கிறார். இது அவருடைய முரண்பாடுகளை அல்லது தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள செய்த தந்திரத்தைத்தான் காட்டுகிறதே ஒழிய மனிதநேயத்தைக் காட்டாது.
1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘காஞ்சிபுரத்தில் (அண்ணா போட்டியிட்ட இடம்) டாக்டர் சீனிவாச அய்யரையும், சென்னையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, கிருஷ்ணாராவையும் ஆதரிக்கிறேன். பிராமணர்கள் இந்த நேரத்தில் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். காமராஜ் வெற்றி பெற்றால் பிராமணர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். ‘‘
(நூல் : தேர்தல் அரசியல்-தி. சிகாமணி)

ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூறுகிறார்:- “தேர்தல் தினத்தன்று பிராமணர்கள் வாக்களிக்க வரக்கூடாது’’
(நூல் : தேர்தல் அரசியல்)

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! ஒரு முறை காமராசருக்கு ஓட்டுப்போடுமாறு வேண்டினார். பின்பு வாக்களிக்க வரக்கூடாது என்று மிரட்டுகிறார். 1957 ஆம் ஆண்டு பிராமணர்கள் உதவி வேண்டும். 1962 -வேண்டாம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய தந்திரம்.

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏ. பாலசுப்பிரமணியம், பி. ராமமூர்த்தி போன்ற பிராமணர்களையும் தேர்தலிலே ஆதரித்தார்.

பார்ப்பனர்களை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – பின் ஏன் பார்ப்பனர்களை தேர்தலிலே ஆதரிக்க வேண்டும்? இது ஒரு சந்தர்ப்பவாதமல்லவா?

Leave a comment